கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தடையாக இருந்ததாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற கொடூர தாய்

கள்ளக்காதலுக்காக 2 வயது பெண் குழந்தையை பெற்ற தாயே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தடையாக இருந்ததாக 2 வயது குழந்தையை அடித்துக்கொன்ற கொடூர தாய்
Published on

நகரி,

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் சபாஷ் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மமதா. இவருக்கும், சித்திப்பேட்டை மாவட்டம் ராய்ப்போல் மண்டலம் வட்டே பள்ளியை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் திருமணமாகி சரண் (வயது 3), தனுஸ்ரீ (2) என 2 குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமியாருடன் மமதாவுக்கு தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்டு 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து 10 நாட்களாக தாய் வீட்டில் வசித்து வந்த மமதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பயாஸ் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. பயாஸ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கள்ளக்காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்து வந்தது. ஒரு கட்டத்தில் தனது 2 வயது பெண் குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் மமதா வீட்டை விட்டு சென்று விட்டார். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து மமதாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதற்கிடையே ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நர்சாராவ் பேட்டையில் கள்ளக்காதலனுடன் மமதா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்று கள்ளக்காதல் ஜோடியை போலீசார் பிடித்தனர். ஆனால் குழந்தையை காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, உல்லாசம் அனுபவிக்க தடையாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் மமதாவே குழந்தையை அடித்துக்கொன்று விட்டார். பிணத்தை சாக்கு மூட்டையில் கட்டி எடுத்து வந்து யாருக்கும் தெரியாமல் புதைத்து விட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com