

திருப்பதி,
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் தீகுல் பகுதியை சேர்ந்தவர் சுவாமி. கார் டிரைவர். இவரது மனைவி ஜோதி. தம்பதியின் மகன் ஹரிகிருஷ்ணா (வயது 3) மற்றும் ஒரு மகள் உள்ளார்.
சுவாமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தைகளுடன் கீசரா அருகில் உள்ள செரியாலா பகுதிக்கு குடிபெயர்ந்தார். ஜோதிக்கு திருமணத்திற்கு முன்பு தன்னுடன் படித்த நவீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்தது. கணவர் வேலைக்கு சென்ற பிறகு ஜோதி நவீனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த 29-ம் தேதி கணவர் வேலைக்கு சென்ற பிறகு நவீனை வீட்டிற்கு அழைத்தார். அப்போது ஜோதியின் மகள் வீட்டிற்கு வெளியே இருந்தார். மகன் ஹரி கிருஷ்ணா வீட்டில் விளையாடி கொண்டிருந்தான்.
ஜோதி நவீனுடன் உல்லாசமாக இருந்தபோது ஹரி கிருஷ்ணா தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தான். உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த மகன் அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த ஜோதி தனது மகனை சரமாறியாக தாக்கி உள்ளார். இதில் ஹரிகிருஷ்ணா படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார்.
இதனை கண்டு பதறிபோன ஜோதி நவீனுடன் மகனை பைக்கில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். ஆஸ்பத்திரியில் ஹரி கிருஷ்ணாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாலை மகனின் பிணத்துடன் வீட்டிற்கு வந்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவர் மகன் இறந்து கிடப்பது குறித்து மனைவியிடம் கேட்டார். ஹரி கிருஷ்ணா கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை உண்மை என நம்பிய சுவாமி தனது மகனின் பிணத்தை சொந்த ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்தார்.
சில நாட்களுக்கு பிறகு சுவாமி மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் ரத்தகறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகன் இறந்த அன்று அருகில் உள்ள குடியிருப்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்தார்.
அதில் மனைவியின் கள்ளக்காதலன் நவீன் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.
மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகனை கொன்றிருக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் மகனை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் ஜோதிமற்றும் நவீனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.