

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ம் தேதி 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, நிசாமாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். மஞ்சள் விலைக்குறைவு காரணமாக மாநிலத்தில் விவசாயிகள் பெரும் அதிருப்திக்கு உள்ளானார்கள். அவர்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில் மாநில அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கவிதா போட்டியிடும் தொகுதியில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களை திரும்பபெற செய்ய தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது 175 விவசாயிகள் உள்பட 185 பேர் களத்தில் உள்ளனர்.
வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசமும் முடிந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு முறையை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா உள்பட 64 பேரது பெயர்தான் இடம்பெற முடியும். ஆனால் இப்போது 185 பேர் போட்டியில் உள்ளதால் வாக்குச்சீட்டு முறைதான் இங்கு கையில் எடுக்கப்படுகிறது. இதற்காக 15 லட்சம் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்க வேண்டியது உள்ளது. அதற்காக பல்வேறு பிரிண்டிங் பிரஸ்களுடன் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஓட்டுப்பெட்டிகள் வாங்கப்படும்.
நாங்கள் சுயேட்சைகளுக்கு சின்னங்களை ஒதுக்க வேண்டும். எனவே கூடுதல் நேரம் எடுக்கும் என தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.