சத்தீஷ்காரில் பயங்கரம்: நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சாவு - தவறாக குண்டு பாய்ந்து சிறுமி பலி

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். அந்த சம்பவத்தில் தவறாக குண்டு பாய்ந்து சிறுமி ஒருவர் பலியானார்.
சத்தீஷ்காரில் பயங்கரம்: நக்சலைட்டுகள் தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் சாவு - தவறாக குண்டு பாய்ந்து சிறுமி பலி
Published on

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அங்குள்ள கேஷ்குதுல் பகுதியில் உள்ள முகாமில் இருந்து நேற்று காலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் பைரம்கார் நோக்கி ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அந்த வீரர்களை கால்வாய் பாலம் ஒன்றில் சில நக்சலைட்டுகள் வழிமறித்தனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்த அவர்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதனால் சில மணி நேரம் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது அந்த வழியாக வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 2 சிறுமிகள் மீதும் தவறுதலாக குண்டு பாய்ந்தது. அதில் ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் பாதுகாப்பு படையினரிடம் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து நக்சலைட்டுகள் தப்பி சென்றனர். அவர்களை வேட்டையாடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com