

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் நடந்த மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் விவகாரத்தில் ஒவ்வொருவரிடமும் பேச அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரம் தீர்க்கப்படும் என நினைக்கிறேன். தீவிரவாதத்தினை கவனத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என கூறினார்.
காஷ்மீரில் 3 போலீஸ்காரர்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். காஷ்மீரி தீவிரவாதியான புர்ஹான் வானியை பெருமைப்படுத்தும் வகையில் அஞ்சல் தலைகளை பாகிஸ்தான் வெளியிட்டது.
இதனை அடுத்து அந்நாட்டுடன் இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த வெளியுறவு துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது என இந்தியா அறிவித்தது.
இந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதத்தினை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என சிங் கூறினார்.
இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தராகண்ட் முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.