பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீர் விரைகிறார் ராணுவ தலைமை தளபதி

ராணுவத் தளபதியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீர் விரைகிறார் ராணுவ தலைமை தளபதி
Published on

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பயங்கரத்தை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்களை தேடி கண்டுபிடித்து வேட்டையாடுவோம் என பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்து உள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது. அந்தவகையில் இரு நாட்டு எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திரா திவேதி இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு செல்கிறார். பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தை தலைமை தளபதி உபேந்திரா திவேதி பார்வையிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பதற்றமான சூழல் எழுந்துள்ள நிலையில் ராணுவத் தளபதியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது

X

Daily Thanthi
www.dailythanthi.com