

ஸ்ரீநகர்,
காஷ்மீரின் சோப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஆய்வு செய்ததில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானியர் என தெரிய வந்துள்ளது.
அவன் வடகாஷ்மீரில் கடந்த 3 வருடங்களாக லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்துள்ளான். அவனது பெயர் அபு மாஜ். மற்றொரு தீவிரவாதியின் பெயர் அப்துல் மஜீத் மீர் என்ற சமீர் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி காவல் துறை தகவல் தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் மீது இவன் 12க்கும் மேற்பட்ட தாக்குதல் நடத்தி உள்ளான். இதில் 3 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ராணுவ அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டு உள்ளார். அவன் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.