கோவா கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் கடலோர காவல்ப்படை உஷார்

கோவா கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. இதனால் கடலோர காவல்ப்படை உஷார் படுத்தப்பட்டு உள்ளது.
கோவா கடல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் கடலோர காவல்ப்படை உஷார்
Published on

பானாஜி,

இந்தியாவில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் கடற்படை பிடித்துச் சென்றது. எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அந்த மீனவர்களின் படகுகளை பாகிஸ்தான் பறிமுதல் செய்து வைத்திருந்தது.

மத்திய அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால், அந்த மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க பாகிஸ்தான் முடிவு செய்தது. அதன்படி விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் மீன்பிடி கப்பல்களுடன் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அப்படி திரும்பி வரும் மீன்பிடி கப்பல்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களுடன், மீனவர்களாக அந்த தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்குள் கடல் வழியாக ஊடுருவிய 10 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். அது போன்ற தாக்குதலுக்கு திட்டமிட்டு தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி செய்வதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கடலோர காவல் படையினரும் இதை உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் மேற்கு கடலோர பகுதி முழுவதும் முழு அளவில் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

கோவா மாநில துறைமுக பொறுப்பு மந்திரி ஜெயேஷ் சல்கான்கரும் இது தொடர்பாக இன்று உறுதிபடுத்தினார். கோவா கடலோர பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com