பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை; தாய்லாந்து உலக அழகி ஓபல் சுசதா

தாய்லாந்துக்கான முதல் உலக அழகி கிரீடம் பெற்று தந்திருப்பது கவுரவம் அளிக்கிறது என ஓபல் சுசதா கூறியுள்ளார்.
பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை; தாய்லாந்து உலக அழகி ஓபல் சுசதா
Published on

ஐதராபாத்,

72-வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் மே 10-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர்.

அதன் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர். இதில், தாய்லாந்து அழகி ஓபல் சுசதா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்றார். அவருக்கு, கடந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டு 71-வது மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் சூட்டினார்.

இந்நிலையில், வெற்றி பெற்ற பின்னர் தாய்லாந்து அழகி சுசதா செய்தியாளர்களிடம் பேசும்போது, நான் அதிக மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். தாய்லாந்துக்கான முதல் உலக அழகி கிரீடம் பெற்று தந்திருப்பது கவுரவம் அளிக்கிறது.

அவர்களை பெருமையடைய செய்திருக்கிறேன் என நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால், பாலிவுட் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். அது ஆச்சரியமளிக்கும் வாய்ப்பாக இருக்கும் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com