

புதுடெல்லி,
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நள்ளிரவில் வெளியிட்ட வீடியோவுக்கு இளைஞர்கள் அளித்த வரவேற்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சமூக வலைத்தளத்தில் புதிய செல்பி வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "நண்பர்களே, எனது முந்தைய வீடியோவை பார்த்ததற்கும், அதற்கு அன்பும் ஆதரவும் அளித்ததற்கும், உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்ததற்கும் மனமார்ந்த நன்றி" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என்றும், தேர்வு முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்த அரசு உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
நீட் விவகாரம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட முந்தைய நள்ளிரவு வீடியோ சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்ற நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்ட இந்த புதிய செல்பி வீடியோவும் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.