தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அக்.6ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு

தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு ஏதுவாக, சட்ட விதிகளின்படி உரிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: அக்.6ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வசதியாக அத்தொகுதி வாக்காளர்களுக்கு வரும் அக்.6ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அம்மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

இடைத்தேர்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரி மாவட்டத்தின் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் 07.09.2026 (திங்கட்கிழமை) அன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, வருகின்ற 06.10.2026 அன்று நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையைச் சுதந்திரமாகவும் தவறாமல் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135B உட்பிரிவு (1) மற்றும் (2)ன் கீழ், வாக்குப்பதிவு நாளான 06.10.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் விடுமுறை

பிரிவு-135B தேர்தல் நாளன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளித்தல்:-

(1) வாணிபம், வியாபாரம். தொழில் நிறுவனங்கள் அல்லது பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு நபர்களுக்கும் மக்களவை அல்லது சட்டப்பேரவைக்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை பெற்றவராக இருப்பின் அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுதல் வேண்டும்

(2) உட்பிரிவு (1)ன் கீழ் விடுமுறை அளிக்கப்பட்ட நபருக்கு சம்பள பிடித்தமோ அல்லது சம்பள குறைப்போ செய்தல் கூடாது மேலும் பணிபுரியும் நபர் அந்த நாளுக்கான சம்பளம் பெறாதவராக பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட அவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும்.

அனைத்து வாக்காளர்களுக்கும்

இதன்படி, மேற்கண்ட இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் தட்டாஞ்சாவடி தொகுதியை சார்ந்த வாக்காளர்களுக்கு, 06.10.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135B பிரிவின் கீழ் இந்த விடுமுறை காரணமாக எந்தவொரு பணியாளரின் ஊதியத்திலும் எந்தவிதக் பிடித்தமும் செய்யக்கூடாது. மேலும், தினக்கூலி மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள், சுழற்சி முறையில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட தகுதியுடைய அனைத்து வாக்காளர்களுக்கும் இவ்விதிமுறை பொருந்தும்.

தண்டனைக்குரிய குற்றம்

மேலும், தேர்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடி தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வேறு தொகுதியில் பணிபுரிந்தாலும், அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, இச்சட்ட விதிகளின்படி உரிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக ஏதேனும் விதிமீறல் இருக்குமேயானால் சட்டப்பிரிவு 135B(3)-ன் கீழ் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com