

புதுடெல்லி,
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கை விசாரித்துவந்த கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் ஒவ்வொரு முறையும் ஒத்திவைக்கக் கோரியதால் நீதிபதி இப்படி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை கடந்த 28-ந்தேதி மீண்டும் மாவட்ட கோர்ட்டு தாமாக விசாரணையை தொடங்கி, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்கு 2 வாரம் அவகாசம் கேட்டதையும் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மாவட்ட நீதிபதி சுஜாதா கோலி கூறும்போது, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பார்க்கும்போது இது மிகவும் தீவிரமானதாக தெரிகிறது. இதனை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது நீதித்துறைக்கு உகந்ததல்ல என்றார்.
இந்த வழக்குக்கு கோர்ட்டு மீண்டும் புத்துயிரூட்டி இருப்பதால் ப.சிதம்பரத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.