

புதுடெல்லி,
கரும்பு உற்பத்தி அதிகமாக நடைபெறும் உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 140 கரும்பு விவசாயிகளை தனது வீட்டுக்கு வரவழைத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். கடந்த 10 நாட்களில் அவர் விவசாயிகளுடன் உரையாடுவது, இது 2வது தடவை ஆகும்.
இந்த உரையாடலின்போது, பிரதமர் கூறியதாவது:
20182019 கரிப் (சம்பா) பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் உள்ளிட்ட தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலை, அவற்றின் உற்பத்தி விலையைப்போல் ஒன்றரை மடங்கு (150 சதவீதம்) அளவுக்கு நிர்ணயிக்கப்படும். அடுத்த வாரம் நடக்க உள்ள மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம், விவசாயிகளின் வருமானம் உயரும்.
அதுபோல், 20182019 சர்க்கரை பருவத்துக்கான கரும்பின் நியாய நிலை, இன்னும் 2 வாரங்களில் அறிவிக்கப்படும். அந்த விலை, முந்தைய சர்க்கரை பருவ விலையை விட அதிகமாக இருக்கும். மேலும், 9.5 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்பை அளிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
கடந்த 10 நாட்களில், விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத்தொகை ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், மாநில அரசுகளையும் நிலுவைத்தொகையை வழங்குமாறு கூறியுள்ளோம்.
விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க சொட்டுநீர் பாசனம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். சோலார் குழாய்களை பயன்படுத்த வேண்டும். வயல்களில் சூரியசக்தி தகடுகளை நிறுவ வேண்டும்.
சாகுபடியின் தரத்தை உயர்த்த உரங்களின் பயன்பாட்டை குறைத்துக்கொண்டு, பண்ணை கழிவுகளை உபயோகியுங்கள்.
இவ்வாறு மோடி கூறினார்.