காங்கிரஸ் அரசின் திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளன: மந்திரி மது பங்காரப்பா பேட்டி

காங்கிரஸ் அரசின் திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளன என்று மந்திரி மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் திட்டங்களின் பயன்கள் ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளன: மந்திரி மது பங்காரப்பா பேட்டி
Published on

பெங்களூரு:

பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தேர்தலின்போது அறிவித்தபடி நாங்கள் உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்க்கட்சிகள் தங்களின் தோல்வியை மூடிமறைக்க உத்தரவாத திட்டங்களை குறை சொல்கின்றன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து அம்சங்களையும் அமல்படுத்த முதல்-மந்திரி சித்தராமையா நடவடிக்கை எடுத்து வருகிறார். காங்கிரஸ் அரசின் திட்டங்களின் பயன்கள் சாமானிய, ஏழை மக்களுக்கு கிடைத்துள்ளது. அந்த மக்களுக்கு பொருளாதார ரீதியாக பலம் கொடுக்கும் திட்டங்களை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். எனது தந்தை பங்காரப்பா வழங்கிய திட்டங்கள் இன்றும் அமலில் உள்ளன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியவர் பங்காரப்பா. எதிர்க்கட்சிகளுக்கு நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் திட்டங்களே அவர்களுக்கு பதிலளிக்கின்றன. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் கர்நாடகத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி நடைபெற்றது. அதனால் மக்கள் அக்கட்சியை நிராகரித்துவிட்டு காங்கிரசை ஆதரித்துள்ளனர். நாங்கள் அமைதி பூங்காவாக கர்நாடகத்தை காப்போம்.

இவ்வாறு மது பங்காரப்பா கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com