தந்தையை ரூ.2 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்திய சிறுவன்

ரவுலுக்கு 9 வயதிலேயே ஏஐ தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தந்தையை ரூ.2 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்திய சிறுவன்
Published on

கொச்சி,

16 வயதிலேயே ஏஐ நிறுவனம் தொடங்கி, தனது தந்தைக்கே ரூ.2 லட்சம் ஊதியத்தில் சிறுவன் வேலை வழங்கியுள்ளார்.

எதிர்காலத்தில் பெரும்பாலான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் ஏஐ தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் ஏஐ கருவிகளை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, அவற்றை உருவாக்கி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு

கேரள மாநிலம் கொச்சி குன்னம்புரத்தில் உள்ள வடக்கு இடப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12-ம் வகுப்பு படித்து வரும் ரவுல் ஜான் அஜு, இதுவரை 15-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை உருவாக்கியுள்ளார்.

ரவுலின் தந்தை அஜு ஜோசப், அடோப், அமேசான், விப்ரோ, ஐபிஎம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தந்தையின் தொழில்நுட்ப பின்னணி காரணமாக, ரவுலுக்கு 9 வயதிலேயே ஏஐ தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஏற்பட்ட ஆர்வத்தால் தொடர்ந்து ஏஐ குறித்து கற்றுக்கொண்டு, சொந்தமாக கருவிகளை உருவாக்கத் தொடங்கினார்.

தந்தைக்கு ரூ. 2 லட்சம் ஊதியம்

இதுமட்டுமின்றி, ‘ஏஐ டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கி தற்போது 15 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இதில் அவரது தந்தை அஜு ஜோசப்பும் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

தன்னிடம் தொழில்நுட்ப அறிவு இருந்தாலும், பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய தனது தந்தையின் அனுபவத்தையும், தொழில்நுட்ப அறிவையும் மேலும் கற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அவரை நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தியதாக ரவுல் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் பலரும் பெற்றோரிடம் பணம் கேட்டு செலவழித்து வரும் நிலையில், 16 வயதிலேயே ஏஐ நிறுவனம் தொடங்கி, தனது தந்தைக்கே ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை வழங்கிய ரவுலின் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com