தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொன்ற சிறுவன் கைது

ஹனூர் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை சிறுவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
தாயிடம் தகராறு செய்த அண்ணனை கொன்ற சிறுவன் கைது
Published on

கொள்ளேகால்:-

2-வது மனைவி

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா ராமபுரா அருகே கெஜ்ஜலநாதா கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவரது மகன் வெங்கடேஷ்(வயது 18). வெங்கடேசுக்கு 2 வயது இருக்கும்போது அவரது தாய், அதாவது ராகவேந்திராவின் முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து ராகவேந்திரா 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். இந்த நிலையில் கூலி வேலை செய்து வந்த வெங்கடேசுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் அடிக்கடி மதுபானம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது சித்தியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

உயிரிழப்பு

அதுபோல் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ், மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு தனது சித்தியிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்பார்த்த வெங்கடேஷ் தம்பியான 16 வயது சிறுவன், வெங்கடேசை சரமாரியாக தாக்கினார். மேலும் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சரமாரியாக அடித்து, உதைத்தார்.

இதில் பலத்த ரத்தக்காயம் அடைந்த வெங்கடேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார்.

கைது

பின்னர் இந்த சம்பவம் குறித்து ராமபுரா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வெங்கடேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசின் தம்பியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com