

ஜம்மு,
காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ந்தேதி துணை ராணுவ வீரர்களின் வாகன அணிவகுப்பில் பயங்கரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மூலம் மோதி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் இறந்தனர். இந்நிலையில் காஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகன அணிவகுப்பு கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்ற போது தேதர் கிராமத்தில் அந்த வழியாக வந்த கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வீரர்கள் சென்ற ஒரு வாகனம் லேசான சேதமடைந்தது. உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
காரை ஓட்டி வந்த டிரைவர் உயிர் தப்பி ஓடி விட்டார். காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து இருந்தாலும், அதில் வெடிமருந்து வெடித்ததற்கான அடையாளமும் இருந்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் அந்த டிரைவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்தது. அவரை நேற்று அதிகாலை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.