கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

நீட் தேர்வு முறைகேடு. வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியின்போது கரப்பான் பூச்சி கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் தடைகளை மீறி நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி நடத்தி வரும் நிலையில் அதன் பிரதிநிதிகளை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. மத்திய மந்திரி ஜே.பி.நட்டாவுடன் சி.ஜே.பி பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சி.ஜே.பி.யின் கோரிக்கைகள் ஏற்கப்படுமா? போராட்டம் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com