மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணையை வெளியிட்டது மத்திய அரசு
Published on

மதுரை,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டமும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டமும் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.

இதில் மந்திரிசபை கூட்டத்தில் 2 முக்கிய ஒப்புதல்களும், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டத்தில் 3 ஒப்புதல்களும் அளிக்கப்பட்டன.

மந்திரிசபை கூட்டத்தில் அளிக்கப்பட்ட 2 ஒப்புதல்களில் தமிழ்நாட்டுக்கு முக்கியமான ஒப்புதல் கிடைத்தது. அது மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்கான ஒப்புதல் ஆகும். இந்த கோரிக்கையை பொதுமக்கள் நீண்டகாலமாக விடுத்து வந்தனர். இந்தநிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்திருந்தது.

இதுதொடர்பாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டின் கோவில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம், மாநிலத்தின் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது தென் தமிழ்நாட்டுக்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது.

மேலும் சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பிராந்திய இணைப்பை மேம்படுத்தும். வர்த்தகத்தை ஊக்குவிக்கும். பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். பன்னாட்டு பயணிகள் மற்றும் வணிகங்களை ஈர்க்கும் விமான நிலையத்தின் திறன் நகரத்தின் வரலாற்று முக்கியத்துவத்துடன் ஒத்துப்போகிறது.

மதுரைக்கு துபாய், அபுதாபி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களை விரிவுபடுத்துவதில் பல விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. உலகின் பல இடங்களிலும் இருந்து இணைப்பு உருவாகும். இங்கு சுங்க நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும். ஒரு விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் ஆக்கப்படும்போது இந்த வசதிகள் எல்லாம் தானாகவே வந்து விடும்.

மதுரைக்கு விமான போக்குவரத்து மேம்படுவதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில், கூடல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் மற்றும் ராமேசுவரம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு பக்தர்கள் வர இணைப்பு பலப்படும். இதுபோல ஆட்டோமொபைல், ரப்பர். ரசாயனம், கிரானைட் போன்ற தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும். நகரத்தின் கல்வி மற்றும் சுகாதாரம் வலுப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு வெளிநாட்டு நகரங்களுக்கு மதுரையில் இருந்து நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com