குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு

காந்தி நகரில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்.
குஜராத் சட்டமன்ற பாஜக குழு தலைவராக பூபேந்திர படேல் தேர்வு
Published on

ஆமதாபாத்,

குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சியை பிடித்து, குஜராத் மாநிலம் பா.ஜனதாவின் காட்டை என நிரூபித்து இருக்கிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகின. முந்தைய தேர்தலைவிட (68.41 சதவீதம்) இது 4.08 சதவீதம் குறைவு ஆகும்.

இந்தநிலையில், குஜராத்தில் இமாலய தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராஜினாமா செய்த குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூபேந்திர படேலின் பெயரை கானு தேசாய் முன்மொழிந்தார்.

முதல்-மந்திரி பதவிக்கான தலைவரை தேர்வு செய்வதற்காக குஜராத் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் கூட்டம் காந்திநகரில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பார்வையாளர்கள் ராஜ்நாத் சிங், பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்-மந்திரி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பூபேந்திர படேல் வரும்12-ம் தேதி முதல்-மந்திரியாக பதவியேற்கிறார்.

பூபேந்திர படேல் மீண்டும் குஜராத் மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com