

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இதன்பின்னர் கடந்த மார்ச் 1ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 1ந்தேதியில் (நாளை) இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவிலேயே உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இதற்காக பல்வேறு மாநிலங்களும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தயாராகி வருகின்றன.
இந்த சூழலில், கொரோனா தடுப்பூசி வராத நிலையில் 18-44 வயதுக்கு உட்பட்டவர்கள் யாரும் நாளை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டாம் என கர்நாடக சுகாதார மந்திரி கேட்டு கொண்டுள்ளார்.
கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியிலும் நாளை கொரோனா தடுப்பூசிகள் போடப்படாது என அரசு அறிவித்து உள்ளது. இதுபற்றி டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கொரோனா தடுப்பூசிகள் இன்னும் எங்களுக்கு வந்து சேரவில்லை.
நாங்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம். நாளை அல்லது நாளை மறுநாள் தடுப்பூசிகள் வந்து விடும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான உறுதிமொழியை அவர்கள் எங்களுக்கு அளித்து உள்ளனர்.
முதலில் 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நாளை அல்லது நாளை மறுநாள் வரவுள்ளன. அதனால் பொதுமக்கள் யாரும் நாளை தடுப்பூசி மையங்களுக்கு செல்ல வேண்டாம் என நான் கேட்டு கொள்கிறேன்.
கொரோனா தடுப்பூசிகள் வந்தவுடன், அதுபற்றி நாங்கள் முறையான அறிவிப்புகளை வெளியிடுவோம். அதன்பின்பு முன்பதிவு செய்து கொண்டவர்கள் மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை போட்டு கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.