

சிம்லா,
இமாசலபிரதேசத்தில், ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அதில், மின்துறை மந்திரியாக அனில் சர்மா பதவி வகித்து வருகிறார். இதற்கிடையே, அனில் சர்மாவின் தந்தையும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுக்ராம், சர்மாவின் மகன் ஆஷ்ரே சர்மா ஆகியோர் சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தனர். மண்டி தொகுதியில் போட்டியிட ஆஷ்ரே சர்மாவுக்கு காங்கிரஸ் கட்சி டிக்கெட் கொடுத்துள்ளது.
இதனால், மந்திரி அனில் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரிடம் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் பகிரங்கமாக விளக்கம் கேட்டுள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டி தொகுதியில், தன் மகனுக்காக பிரசாரம் செய்வாரா? அல்லது பா.ஜனதா வேட்பாளருக்காக பிரசாரம் செய்வாரா என்பதை அனில் சர்மா தெளிவுபடுத்த வேண்டும். காங்கிரஸ் வேட்பாளரான மகனுக்காக பிரசாரம் செய்தால், அனில் சர்மா தனது மந்திரி பதவியை விட்டு விலகுவதுடன், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்.
அவர் விரைவில் முடிவு செய்ய வேண்டும். இதில், கட்சியில் மாற்றுக்கருத்தே இல்லை. இது கட்சியின் ஒருமித்த முடிவு. இவ்வாறு அவர் கூறினார்.