

கவுகாத்தி,
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஜகன்னாத்பூரில் சரக்கு லாரி ஒன்றின் உரிமையாளராக இருந்து வருபவர் பிரமோத் குமார் ஸ்வெயின். இவர் தனது வாகன அனுமதியை புதுப்பிப்பதற்காக போக்குவரத்து துறைக்கு சென்றுள்ளார். அவரிடம், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதிக்கப்பட்ட ரசீது கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி பிரமோத் கூறும்பொழுது, என்னுடைய சரக்கு லாரி ஓட்டுவதற்கான அனுமதி காலாவதி ஆகி விட்டது. அதனால், வாகன அனுமதிக்கான கட்டணம் செலுத்த ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால், எனது பெயரில் 3 அபராதங்கள் விதிக்கப்பட்டு உள்ளன என அவர்கள் கூறினர். அதற்கான தொகையை செலுத்தி ரசீது பெற்று கொண்டேன். அந்த ரசீதில், ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக அபராதம் விதித்து இருப்பது தெரிந்தது என கூறியுள்ளார்.
சரக்கு லாரி ஓட்டுனர் வாகனம் ஓட்டுகையில், ஹெல்மெட் அணிய வேண்டிய தேவையில்லை. எனினும், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி பதிவிட்ட அந்த ரசீதில் இருந்த அபராதத்திற்கான காரணம் தெரிந்து பிரமோத் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்.