

திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்.26-ம் தேதி தொடங்கும் நிலையில் முண்டத்திகோடு பகுதியில் பட்டாசுகள் வைக்கப்பட்டன. கொட்டகை அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்த பட்டாசுகள் கடும் வெப்பத்தால் திடீரென வெடித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், கேரளாவின் திருச்சூரில் பட்டாசு செமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திருச்சூரில் பட்டாசு சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்து மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காக, முழு அரசு இயந்திரமும் களமிறக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேவைப்பட்டால், மாநிலத்திற்கு வெளியில் இருந்து வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை உட்பட, தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு, சுகாதாரம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளின் முயற்சிகளை உன்னிப்பாகக் கண்காணித்து ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். இந்தத் துயர நேரத்தில் கேரளம் அவர்களுடன் துணை நிற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.