

புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் தேசிய நலன் சார்ந்த மற்றும் அரசியல் சாசன வழக்குகளின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் உள்பட பலர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குக்கு பதிலளித்த மத்திய அரசு, அரசியல் சாசன வழக்குகளின் விசாரணையை சோதனை அடிப்படையில் நேரலையில் ஒளிபரப்பலாம் என ஒப்புதல் அளித்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை நேரலையில் ஒளிபரப்பலாம் என தெரிவித்தனர். இது தொடர்பாக முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலிடம் கூறிய நீதிபதிகள், தங்கள் பரிந்துரையை அவரிடம் தெரிவிக்குமாறு இந்திரா ஜெய்சிங் உள்ளிட்ட மனுதாரர்களையும் கேட்டுக்கொண்டனர்.
இதைப்போல 2 தனிநபர்களுக்கு இடையேயான வழக்கின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்புவது குறித்தும் தனது கருத்தை தெரிவிக்குமாறு வேணுகோபாலின் கூறிய நீதிபதிகள், பின்னர் வழக்கின் விசாரணையை 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.