சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்று மனைவியை கொலை செய்த கணவர்..

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் வா, எனக்கூறி மனைவியை கணவர் அழைத்து வந்தார்.
சாமி தரிசனம் செய்ய அழைத்து சென்று மனைவியை கொலை செய்த கணவர்..
Published on

திருப்பதி,

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மராவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் திருப்பதியைச் சேர்ந்த பவித்ரா என்று தெரிய வந்தது. அவரின் கணவர் சீனிவாசுலுவை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட சீனிவாசுலு 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் வா, எனக்கூறி மனைவியை அழைத்து வந்தார்.

முதலில், சொர்ணமுகி ஆற்றில் நீராடி விட்டு, பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம், என்று பவித்ராவிடம் கூறிய சீனிவாசுலு, நீராடுவதற்காக மனைவியை சொர்ணமுகி ஆற்றுக்கு அழைத்து வந்தார். அப்போது சீனிவாசுலு, பவித்ராவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ஆற்றிலேயே வீசி விட்டு தப்பிச்சென்றதாக கூறினார். இதையடுத்து சீனிவாசுலுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com