சோனாலி போகத்தின் மொபைல் போன், லேப்டாப்பை திருடியவர் கைது

சோனாலி போகத்தின் பண்ணை இல்லத்தில் இருந்து மொபைல் போன், லேப்டாப் திருடிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சோனாலி போகத்தின் மொபைல் போன், லேப்டாப்பை திருடியவர் கைது
Published on

சண்டிகர்,

அரியானாவை சேர்ந்த நடிகை மற்றும் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகியான சோனாலி போகத், ஆகஸ்டு 22-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மர்ம மரணம் அடைந்து உள்ளார். இந்த வழக்கில் சோனாலியுடன் சம்பவத்தன்று இருந்த அவரது உதவியாளர் சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் வாசி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு போலீசாரின் காவலில் விசாரணை நடந்து வருகிறது.

இதுதவிர, 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கோவா போலீசார் இந்த மரண வழக்கை விசாரித்து வருகின்றனர். தேவைப்பட்டால், சோனாலி போகத் மரண வழக்கு விசாரணை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் என கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

சோனாலியின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு அடிப்படையில், சொத்து தகராறு மற்றும் அரசியல் சதி குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் அவரது பண்ணை இல்லத்தில் இருந்து மொபைல் போன், லேப்டாப், டி.வி.ஆர். மற்றும் பிற பொருட்களை சிவம் என்ற கணினி பணியில் ஈடுபட்டவர் திருடி சென்று விட்டார் என சோனாலியின் குடும்பத்தினர் அரியானா போலீசில் புகார் அளித்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். இவர், சோனாலியின் உதவியாளரான, கைது செய்யப்பட்ட சுதீர் சங்வானின் உதவியாளர் என கூறப்படுகிறது. பண்ணை இல்லத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும் அவர் எடுத்து சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com