மராட்டிய சட்டசபை: காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாஹேப் தோரட் தற்காலிக சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு?

மராட்டிய சட்டசபையில் காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாஹேப் தோரட் தற்காலிக சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு உள்ளது.
மராட்டிய சட்டசபை: காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாஹேப் தோரட் தற்காலிக சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு?
Published on

புதுடெல்லி,

மராட்டியத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, அந்த கூட்டணியை விட்டு வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியதை தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி 23-ந் தேதி அதிகாலையில் ரத்தானது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் விடுத்த அழைப்பை ஏற்று பாரதீய ஜனதாவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். வருகிற 30-ந் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு கவர்னர் கெடு விதித்தார்.

ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டசபையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிடவேண்டும் என்று கோரி சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும், வாக்குச்சீட்டு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் இன்று மாலைக்குள் தற்காலிக சபாநாயகரை தேர்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ரகசிய வாக்கெடுப்பு கூடாது, வீடியோ பதிவில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஆகிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையின் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி காங்கிரஸ் மாநில தலைவர் பாலாசாஹேப் தோரட் தற்காலிக சபாநாயகராக தேர்வாக வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com