வேலைவாய்ப்பின்மை பிரச்சினை: பா.ஜ.க. அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது - ப.சிதம்பரம் விமர்சனம்

நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க தனது கட்சியிடம் (காங்கிரஸ்) உறுதியான திட்டம் உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பின்மை பிரச்சினை: பா.ஜ.க. அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது - ப.சிதம்பரம் விமர்சனம்
Published on

புதுடெல்லி,

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய அவர், நாட்டில் நிலவி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க தனது கட்சியிடம் (காங்கிரஸ்) உறுதியான திட்டம் உள்ளது எனக் கூறியுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

வேலைவாய்ப்பின்மை பிரச்சினைக்கு பா.ஜ.க. அரசால் தீர்வு காண முடியாது என மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) அனந்த நாகேஸ்வரன் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது பா.ஜ.க. அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது.

பா.ஜ.க அரசால் இயலாது என்றால் 'நாற்காலியைக் காலி செய்' என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினைக்கு பல தீர்வுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வழிகளைப் பற்றி விளக்கமாக சொல்லியிருக்கிறோம் என அதில் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளில் மோடி அரசை காங்கிரஸ் தொடர்ந்து தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com