இளம்பெண் குளித்ததை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை... அடுத்து நடந்த கொடூரம்

மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டை கொட்டகையில் படுத்திருந்தார்.
புதுவை,
புதுவை மாநிலம் பாகூர் அடுத்த பனையடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 34). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் எதிர்வீட்டை சேர்ந்த இளம் பெண் குளித்ததை மாடியில் இருந்து எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், ராஜகுருவிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ராஜகுரு பனையடிக்குப்பத்தில் உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டை கொட்டகையில் படுத்திருந்தார். அங்கு சென்ற அந்த பெண்ணின் உறவினர் தினேஷ்பாபு மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து ராஜகுருவை தட்டி எழுப்பி, அங்கு கிடந்த பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் தடியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த ராஜகுரு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் கதிரவன் அளித்த புகாரின்பேரில் கரையாம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்பாபு (27) மற்றும் அவரது நண்பர்கள் சர்மா (24), முகிலன் (20), கரையாம்புத்தூர் சுமித் (20), அச்சுதன் (24) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கொலையான ராஜகுருவுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






