'அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார்' - ஜிதேந்திர சிங்

விண்வெளி துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ), வரும் 2027 ஆம் ஆண்டு இரண்டு விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்லக்கூடிய வகையில் 'ககன்யான்' என்ற திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. இதனிடையே இந்தியாவை சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர், அமெரிக்காவின் நாசா மூலம் 'ஆக்சியம்-4' என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் விண்வெளியில் சுமார் 60 வகையான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் சுபான்ஷு சுக்லா மட்டும் 7 ஆய்வுகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் 18 நாட்கள் தங்கியிருந்த பின்னர், சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் பூமிக்கு திரும்பினர். இந்த நிலையில், அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட பயணமானது, இந்தியாவின் 'ககன்யான்' உள்ளிட்ட விண்வெளி திட்டங்களுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவையும், அனுபவத்தையும் அளித்துள்ளது. அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார்.
இந்தியாவின் அடுத்த விண்வெளி திட்டம் முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாக இருக்கும். இந்திய விண்வெளி வீரர்கள் முதல் முறையாக ஒரு இந்திய விண்கலத்தில் பயணம் செய்வார்கள். இந்தியாவின் மதிப்பை உயர்த்துவது மட்டுமின்றி, நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட நமது எதிர்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.
இந்தியாவிற்கென்று ஒரு தனி விண்வெளி நிலையம் அமைக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். 2035 ஆம் ஆண்டுக்குள் இது சாத்தியமாகும். மேலும் அதற்கு 'பாரத் விண்வெளி நிலையம்' என்று பெயரிடவும் முடிவு செய்துள்ளோம். சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் உலகிற்கு ஒரு பெரிய செய்தியை அனுப்பி இருக்கிறது. விண்வெளி துறையை பொறுத்தவரை இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






