

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. இந்த பாதிப்பில் இருந்து நாடு இன்னும் மீளாத நிலை காணப்படுகிறது. இவற்றில் டெல்டா, ஒமைக்ரான் பாதிப்புகள் சமீப நாட்களில் அதிகரித்து வருகின்றன.
இதனை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பெருந்தொற்றில் இருந்து தற்காத்து கொள்வதற்காக, கொரோனா தடுப்பூசியை பெருமளவில் மக்கள் விரும்பி செலுத்தி கொள்கின்றனர்.
இந்த நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, நாட்டில் மொத்தம் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 160 கோடியாக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகின் மிக பெரிய தடுப்பூசி செலுத்தும் பணியானது புதிய உச்சம் தொட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் செலுத்திய கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 160 கோடியை கடந்து உள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்பும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் என தெரிவித்துள்ளார்.