இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு..!!

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.

இதனிடையே நாடு முழுவதும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஓமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி மராட்டிய மாநிலம் - 54, டெல்லி - 54, தெலங்கானா - 20, கர்நாடகா - 19, ராஜஸ்தான் - 18, , கேரளா - 15, குஜராத் - 14, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 1, சண்டிகர் - 1, மேற்கு வங்காளம் - 1, தமிழ்நாடு - 1 ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com