சோதனைக்காக காரை நிறுத்திய போலீஸ்காரரை தோப்புக்கரணம் போட வைத்த அதிகாரி

பீகாரில் அதிகாரி வாகனத்தை தடுத்து நிறுத்தியதற்காக, போலீஸ்காரர் ஒருவரை கட்டாயப்படுத்தி 50 முறை தோப்புக்கரணம் போட வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சோதனைக்காக காரை நிறுத்திய போலீஸ்காரரை தோப்புக்கரணம் போட வைத்த அதிகாரி
Published on

பாட்னா,

கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பீகாரின் ஜோகிஹாட் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சூரஜ்பூர் புல் பாலம் அருகே பணியில் இருந்த போலீஸ்காரர் கணேஷ் லால் தத்மா, மாவட்ட வேளாண் அதிகாரியாக இருக்கும் மனோஜ்குமார் என்பவரின் காரை தடுத்து நிறுத்தி, உரிய அனுமதி இருக்கிறதா என விசாரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோஜ்குமார், போலீஸ்காரரை கடுமையாக திட்டியதோடு, 50 முறை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார். அதோடு மட்டுமின்றி, வீடியோ கான்பரன்ஸ் மாநாட்டுக்கு மட்டும் செல்லாமல் இருந்திருந்தால், போலீஸ்காரரை சிறைக்கு அனுப்பி இருப்பேன் எனவும் மிரட்டியுள்ளார்.

அப்போது மூத்த அதிகாரியின் முன்னால், தன்னை அவமதித்து விட்டதாக கணேஷ் லாலை போலீஸ் அதிகாரி ஒருவர் கடுமையாக திட்டினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் பணியில் இருந்த காவலருக்கு நேர்ந்த சம்பவத்திற்கு, பீகார் டி.ஜி.பி. குப்தேஸ்வர் பாண்டே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் குறித்து உரிய விசாரணை அறிக்கைக்கு பின் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஊரடங்கை அமல்படுத்துவதில் நிர்வாகத்தின் ஒருபகுதியாக உள்ள போலீஸ்காரரை அவமதித்து உள்ளனர். இது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் மனித கண்ணியத்துக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளார். பீகாரில் நடந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com