

திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக சபரிமலையில் தற்போது நடை திறக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
குறிப்பாக பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சன்னிதானத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த கெடுபிடி நடவடிக்கைகள் கேரள சட்டசபையில் கடந்த சில தினங்களாக புயலை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில், இன்றும் கேரள சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டதால், கேரள சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.