‘வந்தே மாதரத்தை அவமதிப்பவர்களின் மனநிலையை இந்திய மக்கள் மாற்றுவார்கள்’ - நிதின் நபின்

'வந்தே மாதரம்' பாடல் தொடர்ந்து சிலரால் அவமதிக்கப்பட்டு வருகிறது என பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
‘வந்தே மாதரத்தை அவமதிப்பவர்களின் மனநிலையை இந்திய மக்கள் மாற்றுவார்கள்’ - நிதின் நபின்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்ற, சாந்த் குரு ரவிதாஸின் 650-வது பிறந்தநாள் விழாவான 'சமரஸ்தா சங்கல்ப் திவாஸ்' நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு ஆட்சியாளர்கள் இந்த நாட்டை ஆண்டனர். ஆனால், அவர்களால் நமது கலாசாரத்தின் அடித்தளத்தை அசைக்கவோ, வேரறுக்கவோ முடியவில்லை. இன்றும் கூட, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் மனப்பான்மையுடன் செயல்படும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்டதும், நமது தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தேசபக்தி கீதமாகத் திகழ்ந்ததுமான 'வந்தே மாதரம்' பாடல், இந்நாட்டில் உள்ள சிலரால் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது.

ஆனால் அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்; இந்நாட்டின் மண்ணிற்கு அத்தகைய வலிமை உண்டு. லோடி மற்றும் சிக்கந்தர் போன்றவர்களின் மனங்களையே மாற்றியமைக்க முடிந்த இந்த மண்ணின் வலிமை, வருங்காலத்தில் 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தவர்களின் மனங்களையும் நிச்சயம் மாற்றும். அவர்களின் மனநிலையை இந்திய மக்கள் மாற்றுவார்கள்.

ஆனால், நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை ஏழைகளுக்கே உண்டு. அந்த ஏழைகளின் ஆசியால்தான் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்தது. வளர்ச்சித் திட்டங்கள் சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள மனிதரையும் சென்றடைய வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com