

புதுடெல்லி,
தீபாவளி, தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் அவர்களின் தந்தைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசி ஸ்ரீஅய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் உள்பட சுமார் 100 பேர் இதற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனிடையே கடந்த மாதம் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் மோகன் பராசரன், துருவ் மேத்தா, அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர் தரப்பில் கோபால் சங்கரநாராயணன், தமிழக அரசு தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணிய பிரசாத், வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் முற்றிலும் நசிவடையும் நிலையில் உள்ளது. எனவே, இந்த வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மனுதாரர் தரப்பில், டீசல் உள்ளிட்ட வாகனங்கள் வெளியிடும் புகை, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை ஆகியவற்றால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. எனவே இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்து பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றும், இந்த வழக்கின் மீதான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் உத்தரவிட்டனர்.