இந்திய பயணத்தில் சென்னைக்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு வருகை தருகிறார்.
இந்திய பயணத்தில் சென்னைக்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 26ந்தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்நாட்டில் தோன்றிய புதிய வகை கொரோனா பாதிப்புகள் மற்றும் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அவரது பயணம் ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அதிகாரப்பூர்வ பயண அறிவிப்பு தேதி வெளியிடப்படாத நிலையில், வருகிற ஏப்ரல் 26ந்தேதி இந்தியா வருகை தர கூடும் என கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின் முதல் சர்வதேச பயணமாக இந்தியா வருகிறார் போரிஸ் ஜான்சன். இதனால், இந்தியாவுக்கு இங்கிலாந்து அதிக முக்கியத்துவம் தருகிறது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்திய பயணத்தில் தமிழ்நாட்டிற்கு அவர் வருகை தருகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தவிர, அவரது சென்னை பயணம் முடிவு செய்யப்பட்டு விட்டது. இதனால், இங்கிலாந்தில் இருந்து முன்னேற்பாடு பணிகளை கவனிக்க குழு ஒன்றும் சென்னைக்கு வர உள்ளது.

வருகிற ஜூனில் ஜி7 உச்சி மாநாட்டை இங்கிலாந்து முன்னின்று நடத்த உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை தரும்படி, பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com