3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றார்.
3 நாள் சுற்றுப்பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சென்றார் ஜனாதிபதி
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் இன்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.

ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே மற்றும் மாநிலங்களவை எம்.பி. சாம்சேர் சிங் மன்ஹாஸ் ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்று இருக்கிறார்கள். அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மான், பிரதமர் கோஹிர் ரசூல்சோடா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுகுர்ஜோன் சுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடன் ராம்நாத் கோவிந்த் தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தலைநகர் துஷன்பேயில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகியோரின் நினைவிடங்களில் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மாரியாதை செலுத்துகிறார்.

அதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் தேசிய பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு மாணவர்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை ஒழிப்போம்; நவீன சமுதாயத்தின் சவால்கள் என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அவர் தஜிகிஸ்தானில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

2009ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் தஜிகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், ராம்நாத் கோவிந்தின் பயணம் இந்த உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com