இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 94.37சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 94.37சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 94.37சதவீதமாக உயர்வு
Published on

புதுடெல்லி,

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,44,222 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 41,970 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,00,792 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 94.37சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 3ஆயிரத்து 248 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 25-வது நாளாக, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 482 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,40,182 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு சதவீதம் 1.45 குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 95 பேரும், டெல்லியில் 77 பேரும்,மேற்கு வங்கத்தில் 49 பேரும், கேரளாவில் 32 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 23 பேரும், சத்தீஸ்கரில் 21 பேரும், பஞ்சாப்பில் 24 பேரும், ஹரியாணாவில் 25பேரும், ராஜஸ்தானில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இந்தியாவில் இதுவரை 14 கோடியே 58 லட்சத்து 85 ஆயிரத்து 512 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 57 ஆயிரத்து 763 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com