

புதுடெல்லி,
சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையில், பயனற்றதாக இருக்கும் 58 சட்டங்களை நீக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் மசோதா நிறைவேறியது. இவ்வாறு ரத்து செய்யப்பட இருக்கும் 58 சட்டங்களில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் (பணமதிப்பு நீக்கம்) திருத்த சட்டம் 1998-ம் ஒன்றாகும். கடந்த 1999-ம் ஆண்டு அமலில் வந்த இந்த சட்டம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு வகை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்த சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு அப்போதைய நிதி மந்திரி யஷ்வந்த் சின்கா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் 1978-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ரூபாய் நோட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, 1999-ல் அமலாக்கப்பட்டது. இந்த சட்டம் மூலம் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டமும் ரத்து செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.