சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி?

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை விவரங்கள் ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கை ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி?
Published on

புதுடெல்லி,

மத்தியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்வதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியை சட்டவிரோதமாக பெற்றது தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 13-ந் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் இல்லம், டெல்லி ஜோர்பாக் பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ள வீட்டில் சோதனை நடந்த போது ப.சிதம்பரம் அங்கு இருந்தார். சோதனை பற்றி பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில், சோதனையில் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து சென்றதாக கூறினார்.

இந்த நிலையில், ஜனவரி 13-ந் தேதி டெல்லி ஜோர்பாக் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது குறிப்பிட்ட ஒரு ஆவணம் கைப்பற்றப்பட்டதாகவும், அதுபற்றிய தகவலை சி.பி.ஐ.க்கு தெரிவித்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வரைவு அறிக்கையை தயாரித்து அதை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யதாக அறியப்படுகிறது. அந்த அறிக்கையில் உள்ள சில பகுதிகள் அடங்கிய ஆவணம்தான் ப.சிதம்பரத்தின் டெல்லி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சிக்கியதாக நேற்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் உள்ள சில பகுதிகள் ப.சிதம்பரம் வீட்டில் சிக்கியது எப்படி? அது ரகசியமாக வெளியானது எப்படி? அதற்கு உடந்தையாக இருந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி ப.சிதம்பரத்திடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது, வழக்குகள் பற்றி நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com