இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் 'மஹா' புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு

‘மஹா புயல்’ காரணமாக இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் 'மஹா' புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

அரபிக்கடலின் மத்திய-கிழக்கு பகுதியில் மஹா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயலானது, வரும் நவம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் குஜராத்தின் டையு மற்றும் போர்பந்ததர் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சமயத்தில் சுமார் 90 முதல் 100 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும் எனவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 7 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறுகிறது.

தற்போது மஹா புயல் காரணமாக இந்த போட்டி பாதிக்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டிற்கு இடையில் நடைபெற்ற இந்தியாவுடனான் முதல் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com