

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று, கேள்வி நேரத்தின்போது கேரள மாநிலம் கோழிக்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராகவன், மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத் சிங் படேலிடம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய கலைப்பொருட்கள், நகைகள் இன்னும் எந்தெந்த நாடுகளில் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது? அவற்றை திரும்பப்பெற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது? என்று கேள்வி கேட்டார்.
இதற்கு கடந்த 5 ஆண்டுகளில், மீட்கப்பட்ட சிலைகள், பழமையான சின்னங்களின் பட்டியலை முன்வைத்து பிரகலாத் சிங் படேல் பதில் அளித்து பேசினார்.
அப்போது, இதே விவகாரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி துணைக்கேள்வி எழுப்பினார். அவர், நமது நாட்டில் எத்தனை கோவில்கள் உள்ளன? அங்கு எத்தனை சிலைகள் உள்ளன? என்பது தொடர்பான பதிவேடுகள் நம்மிடம் உள்ளதா? இதுபற்றி அரசு கணக்கீடு நடத்தியுள்ளதா? மேலும் கோவில் சுவர்களில் உள்ள தகவல்களை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று சில கேள்விகளை கேட்டார்.
இதற்கு, மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத் சிங் படேல் இவை குறித்து கணக்கிட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு. அவர்களிடமே தரவு இருக்கவேண்டும். அவர்கள் இந்த கணக்கீடுகளை மேற்கொண்டால் அதை நாம் பாராட்டுவோம் என்று கூறினார்.