காவிரி உபரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு எதிர்க்கிறது; கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு

காவிரி உபரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி
Published on

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

உபரி நீருக்காக எதிர்ப்பு

காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசே நிதி உதவி அளித்திருக்கும் விவகாரம் பற்றி கர்நாடக அரசுக்கு தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. அரசியலில் மூழ்கி இருப்பவர்களுக்கு, மாநிலத்தின் உரிமை பற்றி நினைவிருக்குமா?. நான் முதல்-மந்திரியாக இருந்த போது கொண்டு வரப்பட்ட மேகதாதுவில் புதிதாக அணைகட்டும் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி கொள்ள முடியாத நிலை தமிழகத்திற்கு ஏற்படும். இதனால் தான், மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறது. தற்போது காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி தமிழக அரசு 342 ஏரிகள், 42,170 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டம் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்ட பின்பு, சுதாரித்து கொண்ட நமது நீர்ப்பாசனத்துறை மந்திரி, அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

மந்திரியின் தவறே காரணம்

இந்த விவகாரத்தில் மற்றொரு விஷயமும் பகிரங்கமாகி உள்ளது. தமிழ்நாட்டில் நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கர்நாடகத்தில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. கர்நாடகத்தில் இருந்து ஒரு கட்சி அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அதே மாநிலத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருக்கிறது. மத்தியிலும் பா.ஜனதா அரசு இருக்கிறது. கர்நாடகத்தில் இருந்து அதிகபடியான எம்.பி.க்கள் கிடைத்திருக்கிறார்கள்.இதனால் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நியாயமாகவும், கர்நாடகத்தின் உரிமையை பாதுகாக்கும் விதமாகவும் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதற்கு, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியின் தவறே காரணம். அவர் சவால் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, கர்நாடகத்தின் உரிமையை காக்க சவால் விட வேண்டும். இல்லையெனில், நீர்ப்பாசனத்துறை பற்றியாவது அவர் அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com