

புதுடெல்லி,
இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் சிக்கி வருகிறது. எனவே அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதற்காக கம்ப்யூட்டர் வசதியுடன் கூடிய தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை தேடி வருகிறது.
குறிப்பாக அரசு நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை பயன்படுத்து வதற்காக இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) உதவியை கேட்டுள்ளது. இது குறித்து தேர்வு முகமை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கம்ப்யூட்டர் அடிப்படையிலான மையங்களை தனியார் நிறுவனங்களிடம் பெற முடியாது.
கடுமையான அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்த பின்னரே அவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ.யிடம், உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பல தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளன. எனவே அவற்றின் விவரங்களை தருமாறு கேட்டுள்ளோம்' என்று தெரிவித்தார்.