எல்லையில் தொடர் தாக்குதல்; முப்படை தளபதிகளுடன் மத்திய ராணுவ மந்திரி ஆலோசனை என தகவல்

எல்லையில் தொடர் தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பற்றி முப்படை தளபதிகளை மத்திய ராணுவ மந்திரி சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.
எல்லையில் தொடர் தாக்குதல்; முப்படை தளபதிகளுடன் மத்திய ராணுவ மந்திரி ஆலோசனை என தகவல்
Published on

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் பலியாகினர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி தாக்கி அழித்தது. இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இந்தியாவுக்குள் நேற்று ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமான படையினர் தடுத்து நிறுத்தப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்களது எப் 16 ரக ஜெட் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இன்று காலை 6 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தியாவின் பதிலடியை தொடர்ந்து துப்பாக்கி சூடு காலை 7 மணியளவில் நிறுத்தப்பட்டது.

இதனால் நாட்டின் பாதுகாப்பு பற்றி மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முப்படை தளபதிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தொடர்ந்து அவர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை பகுதிக்கு சென்று நாளை ஆய்வு மேற்கொள்கிறார். அவருடன் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் செல்கிறார் என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com