'வந்தே மாதரம்' பாடல் தாய்நாட்டின் மீதான அன்பை தேசிய கடமையாக மாற்றியது - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ‘வந்தே மாதரம்’ பாடல் ஊக்கமளித்தது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
'வந்தே மாதரம்' பாடல் தாய்நாட்டின் மீதான அன்பை தேசிய கடமையாக மாற்றியது - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
Published on

சிம்லா,

இமாச பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள இந்திய உயர் ஆய்வுக் கழகம் (IIAS) சார்பில் நடத்தப்பட்ட 'வந்தே மாதரம் பயணம்' குறித்த நிரந்தரக் கண்காட்சியின் தொடக்க விழா மற்றும் 'சர்தார் பட்டேலின் தொலைநோக்குப் பார்வை: ஒருங்கிணைப்பு, ஐக்கியம் மற்றும் கூட்டாட்சி' குறித்த சர்வதேசக் கருத்தரங்கு ஆகிய நிகழ்ச்சிகளில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் காணொளி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்திய சி.பி.ராதாகிருஷ்ணன், “சர்தார் வல்லபாய் பட்டேல் வெறும் நிலப்பரப்புகளை மட்டுமல்லாமல், இந்தியர்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து, 'ஒரே தேசம், ஒரே அரசியலமைப்பு மற்றும் ஒரே பொதுவான எதிர்காலம்' என்பதற்கான அடித்தளத்தை அமைத்தார்” என்று குறிப்பிட்டார்.

மேலும், "தாய்த்திருநாட்டின் மீதான அன்பை ஒரு புனிதமான தேசிய கடமையாக 'வந்தே மாதரம்' பாடல் மாற்றியது” என்று தெரிவித்த அவர், “துணிச்சல், தியாகம் மற்றும் நம்பிக்கை கொண்டு செயலாற்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ‘வந்தே மாதரம்’ பாடல் ஊக்கமளித்தது” என்று கூறினார்.

நேர்மை, சிறப்பான செயல்பாடு மற்றும் ஒருங்கிணைந்த நோக்கம் ஆகியவற்றின் மூலம் தேசபக்தி அன்றாடம் வெளிப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய சி.பி.ராதாகிருஷ்ணன், ஒற்றுமைமிக்க, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்காக உழைக்க வேண்டும் என்றும், காலத்தால் அழியாத ‘வந்தே மாதரம்’ பாடலின் செய்தியையும், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையையும் நாட்டு மக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com