இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று அறிமுகம்

இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்று அறிமுகம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் 3 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசியானது முதல் மற்றும் 2-வது தவணைகளாக செலுத்தப்படுவதுடன், பூஸ்டர் தடுப்பூசியாகவும் போட வலியுறுத்தப்படுகிறது. இதனால், நோய் எதிர்ப்பு ஆற்றல் மக்களுக்கு அதிகரிக்கும். ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும்.

இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, அந்நிறுவனத்தின் இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து, அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்ளும் வகையிலான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்றது. இதனால், நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்துசெலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் என்ற நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயத்திற்கு கடந்த டிசம்பர் இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து, இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை மத்திய சுகாதார மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்.

வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சந்தையில் இந்த நாசி வழி தடுப்பு மருந்து கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. இதன்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோசாக இதனை பயன்படுத்த முடியும். எனினும், இந்த இன்கோவேக் என்ற கொரோனா தடுப்பு மருந்து கோவின் வலைதளத்தில் இதுவரை கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு இதன் விலை ரூ.800 என விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325-க்கு விற்பனை செய்யப்படும்.

இதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்து கொள்ளலாம். கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களும், பூஸ்டர் டோசாக நாசி வழியே செலுத்தும் இன்கோவேக்கை எடுத்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com