கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த வாலிபர்.. கள்ளக்காதலுக்கு பழிவாங்க மைத்துனர் வீசிய “காதல்” வலை

தனது அக்கா கணவரை பழிவாங்க, அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என அந்த வாலிபர் திட்டமிட்டார்.
உத்தரபிரதேசத்தில் பரேலி மாவட்டம் கமலுபீர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவ் குமார் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஒரே ஊரில் இருக்கும் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்தபோது அவருக்கும், அவருடைய கொழுந்தியாள் கல்பனாவுக்கும் (19) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.
இவர்களது விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்தநிலையில், கடந்த மாதம் 23-ந்தேதி அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்தனர். கேசவ் குமாரின் இந்த செயல், அவருடைய மைத்துனரான ரவீந்திரனுக்கு (22) ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அக்காள் கணவர் என்று நம்பி வீட்டுக்குள் விட்டதால், நம் தங்கையுடனே கள்ளத்தொடர்பு வைத்து, குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டாரே என்று கருதினார்.
எனவே அக்காள் கணவரை பழிவாங்க, அவரது குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என ரவீந்திரன் திட்டமிட்டார். அவர் ஏற்கனவே கேசவ் குமாரின் 19 வயது தங்கையை காதலித்து வந்தார். அக்காள் கணவரை பழிவாங்க, அன்று மறுநாளே அவரது தங்கையை அழைத்துக்கொண்டு ரவீந்திரனும் வீட்டைவிட்டு ஓடினார். இதுகுறித்து இரு குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு ஜோடிகளையும் தேடிவந்த நிலையில் அவர்கள் 4 பேரையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
இதையடுத்து இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர்களை இரு குடும்பத்தினரும் மன்னித்து ஏற்றுக்கொண்டனர். இந்த சமரசத்தை அடுத்து இரு ஜோடிகளும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். பிரச்சினை சுமுகமாக முடிந்தாலும், பாதிக்கப்பட்டது என்னவோ கேசவ் குமாரின் மனைவிதான். இந்த விவகாரம் தற்போது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






